ரமலான் மாதத்தின் முப்பது நாட்களில் ஒவ்வொரு பத்துத் தினங்களுக்கும் ஒரு தனிப்பெரும் சிறப்பு உண்டு.
- முதலாவது பத்து: ரஹ்மத் எனும் இறைக் கருணை
- இரண்டாம் பத்து: மஃபிரத் எனும் இறை மன்னிப்பு
- மூன்றாம் பத்து: நரகிலிருந்து விடுதலை
முதல் பத்து தினங்க்ளில் ஓதவேண்டிய துஆ:
اللَّهُمَّ ارْحَمْنِي بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
(அல்லாஹும் மர்ஹம்னீ பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்)
பொருள்:
யா அல்லாஹ்! கிருபையாளருக்கெல்லாம் கிருபையாளனே! உன் அருளைக் கொண்டு எனக்குக் கிருபை செய்வாயாக!
ரமலானின் முதல் பத்துத் தினங்கள் இறைவனுடைய ரஹ்மத் என்னும் பேரருள் இறங்கும் தினங்களாகும். அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அடைவதன் மூலமே இவ்வுலக, மறுவுலக வாழ்க்கை நிம்மதி பெறும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “ஒரு மனிதன் எவ்வளவுதான் நற்செயல்கள் செய்தாலும் அல்லாஹ்வின் ரஹ்மத் என்னும் கருணையின்றி மன்னிப்பையோ, சுவனத்தையோ பெற்றுவிட முடியாது. ‘யாரஸுலல்லாஹ்! தாங்களுக்குமா?’ என ஸஹாபாக்கள் கேட்டதற்கு, ‘ஆமாம், நானும் தான் அல்லாஹ்வின் கருணையை எதிர்பார்த்திருக்கிறேன்’ என கூறினார்கள்.”
எனவே, நாம் இந்த முதலாம் பத்தில் அதிகமாக அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை, கருணையை அழுது கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். முதல் பத்து தினங்கள் இந்த துஆவை அதிகம் ஓதிக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது பத்து தினங்களில் ஓதவேண்டிய துஆ:
اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي يَا رَبَّ الْعَالَمِينَ
(அல்லாஹூம்மங்பிர்லீ துனூபீ யாரப்பல் ஆலமீன்.)
பொருள்:
யா அல்லாஹ்! என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக!
ரமலானின் இரண்டாவது பத்துத் தினங்கள் மஃபிரத் எனும் மன்னிப்புக்குரியதாகும்.
இதில் நமது கடந்தகால பாவங்களை எண்ணி வருந்தி அழுது, இனிமேல் இதுபோன்ற பாவங்களின் பக்கம் நான் செல்லமாட்டேன் என மனதில் உறுதிகொண்டு தவ்பா செய்து பாவங்களிலிருந்து மீள வேண்டும்.
மூன்றாவது பத்தில் ஓதவேண்டிய துஆ:
நோன்பின் மூன்றாம் பத்தில் நாம் நரகத்தின் தீங்கிலிருந்து பாதுகாப்பும், சுவனத்தையும் கேட்டுப்பெற வேண்டும். மனப்பூர்வமான துஆவை அல்லாஹ் நிச்சயம் அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.
اللَّهُمَّ اعْتِقْنِي مِنَ النَّارِ وَادْخِلْنِي الْجَنَّةَ يَا رَبَّ الْعَالَمِينَ
(அல்லாஹும்மஃதிக்னீ மினன்னார், வஅத்கில்னில் ஜன்னத்த யாரப்பல் ஆலமீன்.)
பொருள்:
யா அல்லாஹ்! என்னை நரகிலிருந்து விடுதலை செய்வாயாக! என்னைச் சுவனத்தில் நுழைய வைப்பாயாக!
